
வெளிச்சம் தேடும் விட்டில் பூச்சிகள் : கணினியில் கரையும் பொறியாளர்கள்
இரவா ? பகலா ?
எங்களுக்குப் பேதமில்லை
வெயிலோ மழையோ
விடுமுறைகள் விடுவதில்லை
உறவா ?? உயிரா??
உணர்வுக்கு மதிப்புமில்லை...
கணினியில் வேலை செய்வதால்
கணினியாகவோ மாறிப் போனோம்...
இதயத்தைத் தொலைத்துவிட்டு
இயந்திரமாய் மாறி விட்டோம்....
கனவுகளுடன்தான்
கல்லூரி வாசலை மிதித்தோம்...
கணினி அசைவுகளில்
கனவுகளை தினம் கண்டோம்...
ஐபோனைத் தாண்டி
ஆண்ட்ராய்டைத் தொட்டாலும்
எங்களுக்கு எடுத்து சொல்வது
நோக்கியா 1100 பற்றித்தான்..
ஐந்தும் ஐந்தும் பத்தென்ற
ஆதாம் ஏவாள் காலத்து
அரைகுறைக் கூட்டல் கழித்தல்
திரைப்படமாய்ச் சிரிக்கும்
வகுப்பறையில்....
அதிகம் புரியாத அல்ஜீப்ராவையும்,
அறிவே இல்லாத முக்கோணவியலையும்
அரை நொடியில் தீர்க்கவேண்டும்
தேர்வறையில்....
எங்கள் சந்தேகங்களுக்கு
என்றும் பரிசாய்க் கிடைப்பது
இன்டர்நெல்ஸ்தான்..
சந்தேகங்கள் அதிகம் கேட்டால்
சாவுமணிகள் சங்கமிக்கும்..
தப்பித் தவறி செய்த தவறுகளும்
எப்போதோ செய்த குற்றங்களும்
அப்பொழுது நினைவில் வரும்
அப்ரைசல் மேனேஜராய்..
அமைதியாய் ஆமாம் போட
அப்போதே பயின்றோமென
இப்போதுதான் புரிகிறது...
ஆங்காங்கே பாலைவனச் சோலையாய்
அறிவுத் தாகம் தீர்த்திடும்
அரிய தீர்த்தங்கள் அதிசயமாய்...
படித்து முடித்து நேர்முகத் தேர்வுக்குப் போனால்
நீண்ட வரிசையில் நீண்டு போகிறது...
வாட்ச்மேனையும் வாத்தியாரையும் தவிர...
மெக்கானிக்கல் இன்ஞ்சினியர் முதல்
கெமிக்கல் இன்ஞ்சினியர் வரை
கால்கடுக்க நிற்கிறார்கள்..
கம்யூட்டர் வேலைக்கு.
தொட்டியை நிரம்பும் நீரை
தொடர்வண்டி வேகத்தில்
கணக்கீடு செய்ய வேண்டுமாம்...
புரியாத அர்த்தங்களை
புரிந்து கொண்டோம் இன்று...
டெட் லைன் என்ற வார்த்தையில்
ரெட் லைனாய்க் காட்டும் போது...
ஒன்பது பேர் வேலை செய்தால்
எண்பது நாட்களில் முடிக்கலாம்
ஐம்பது நாட்கள் கழித்து
ஐந்து பேர் விலகினால்
எத்தனை நாட்களில் முடிக்கலாம்..
எண்ணித் தெரிந்து கொண்டேன்
எதிர் இருக்கையில் உள்ளவன்
எதிர்பாராமல் பேப்பர் போட்டு
கண்பாராமல் மறைந்த போது..
எழுத்துத் தேர்வைக் கடந்து
எதிர்கொண்டோம் நேர்முகத்தேர்வை....
மகரதிகள் மத்தியில்
மாட்டிக் கொண்ட அபிமன்யூவாய்....
எருமைமாடு முதல் ஏரோப்பிளேன் வரை
ஜி.ஆர்.பி முதல் டி.ஆர்.பி வரை சகலத்தையும் சங்கோஜமின்றி கேட்டார்கள்...
சமாளித்து விடையளித்தோம்...
இறுதியாண்டு முடிந்து இறுதியாகக் கிடைத்தது ...
ஏதோ ஒரு மூலையில் எங்களுக்கும் ஒரு வேலை...
ஐ.டி பார்க்கில் அடி எடுத்துவைத்ததும்
அனுபவத்தில் தெரிந்து கொண்டோம்...
இதுவரை படித்ததெல்லாம் எதுக்கும் உதவாதென்று....
அடர்ந்த வனமதற்குள்
அத்துமீறி நுழைந்தது போல்
எத்தனை எத்தனை விலங்குகள்...
மொத்தமும் காட்சிக்கு..
குளிரூட்டிய கண்ணாடி அறைக்குள்..
உறங்கும் இரவில் விழிக்க வேண்டும்..
விழிக்கும் பகலில் உறங்க வேண்டும்..
இரவும் பகலும் கடந்து செல்ல
இதுவே நிலையாய் மாறிப் போகும்..
நேரம் காலம் தெரியவில்லை...
பேரம் பேச தெரிவதில்லை ...
வாரம் வாரம் சேரும் வேலை
பாரம் மட்டும் குறையவில்லை...
லட்சங்கள் வாங்கினாலும்
மிச்சமென்று எதுவுமில்லை...
எட்டு மணி நேர வேலை
எங்களுக்கு என்றும் இல்லை..
ஏழு நாட்கள் வாரத்தில்
எங்களுக்குப் போதவில்லை...
விடுமுறையோடு சம்பளம்
எல்லோருக்கும் தெரியும்...
விடுமுறையிலும் வேலை
எங்களுக்கு மட்டுமே தெரியும்..
விடுமுறைத் தினத்திற்காய்
நெடுநாளாய் காத்திருப்போம்.
பள்ளிக் குழந்தையாய்..
துள்ளி விளையாட அல்ல...
தூங்கி எழுவதற்கு....
ஊர்ப்பக்கம் பேசுவார்கள்..
உனக்கென்னப்பா.. ஐ.டி வேலையென்று..
உள்ளுக்குள்தானே தெரியும்...
உதை வாங்கும் கழுதைகள்...
உண்மையில் நாங்களென்று..
தியாகம்தான் உன்னை உயர்த்தும்..
தீயாய் வேலை செய் குமாரென்று..
தினமும் எதிரொலிக்கும்...
ஊக்கமாய் அல்ல..
பகல் வேஷமாய்...
வைத்தவொரே மரத்தில் மொத்த ரக பழங்களும்
வகைவகையாய்க் காய்ந்துத் தொங்க
விதவிதமாய்க் கட்டளையிடுவார்கள்..
அறுவடை முடியும் வரையில்
தேன்துளியைத் தெளித்து,
சக்கரையாய்ப் பேசுவார்கள்..
தெருநாயாய்க் கற்கள் விழும்
தெருவெங்கும் முட்கள் வரும்
அப்ரைசல் நாள்வந்தால்...
அறிவதற்கு முன்பாகவே,
உழைப்பென்னும் செங்குருதி,
சிறிதுசிறிதாய் உறிஞ்சப்பட்டிருக்கும்..
அட்டைப்பூச்சிகளால்..
வாழ்வனைத்தும் உழைத்தாலும்,
வாசக் கருவேப்பிலைதான் நாங்களே..
தேவை முடிந்ததும் தூக்கி எறியப்படுவோம்...
பழைய துணிக்கு பக்கெட் விற்பவன்,
பள்ளிக் கூடத்து தமிழ் வாத்தியார்,
பிள்ளையார் கோவில் பூசாரி,
இவர்கள் வரிசையில் இணைந்து கொண்டோம்
நாங்களும்....
எதிர்த்து பேசுவதை மறந்து போனோம்...
எதிர் வருபவரை மறந்து போனோம்...
என்னையும் சில நேரம் மறந்து போனோம்...
இரவும் பகலும் மாறிப் போனது
உறவும் நட்பும் தொலைந்து போனது...
இவ்வளவும் கடந்துதான்...
இருளகற்ற முயற்சி செய்கிறோம்..
எங்கள் இல்லங்களில்..
வெற்று விழிகளுக்கு தெரிவதெல்லாம்
வெளிச்சமளிக்கும் விளக்குகள்தான் -அதில்
உற்றுநோக்கிப் பார்த்தால் தெரியும்..
விளக்கில் எரிவது விட்டில்பூச்சிகளென்று..
ஆம்..
அது நாங்களே....
அந்த வெளிச்சம் தேடும் விட்டில் பூச்சிகள்..
✍️ கவிஞர் விஜயநேத்ரன்